India,  LTTE,  War of Tamil Eelam

இந்தியாவின் புலி – 1

அன்று தமிழன் துன்பப்படுகிறான்; குண்டர்களால் அகிம்சைப் போராட்டங்கள் குலைக்கப்படுகிறது; இன வெறியர்களால் இலங்கை முழுவதும் சிங்கள அரசாங்கத்தின் உதவியுடன் கொல்லப்படுகிறான்; என்று மிகவும் இரக்கப்பட்டு உதவியது இந்தியா. சிங்கள காடையர்கள் வாக்காளர் பட்டியலுடன் வீடு வீடாக தேடி வந்து கொன்று குவித்த இனக் கலவரங்கள். தமிழனைக் கொன்று தீயிலே தீக்கிரையிட கண்டும் காணாததும் போல் இருந்தது சிங்கள அரச காவல்துறை.

இதைக் கண்டு பொறுக்காத தமிழனின் தாய்நாடான இந்தியா; அகிம்சையை உலகுக்கு போதித்த இந்தியா அயல்நாட்டு தமிழனுக்கு பயங்கரவாதத்தைப் பழக்கியது. அவை தான் தமிழீழ விடுதலை இயக்கங்கள்.

பண உதவி தொடக்கம் ஆயுதப் பயிற்சி வரை சகலதையும் தமிழீழ இளைஞர்களுக்கு கொடுத்தது; ஆயுதங்கள் இலவசமாக கையளிக்கப்பட்டன. ஆல விதையில் தோன்றிய ஆலமரமாய் இன்று இருக்கும் விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் கூட இந்தியாவால் பயிற்சியளிக்கப்பட்டவர் தான்.

உலகில் வேறெங்கும் நடைபெறாத முறையில் வளர்த்த தந்தையின் மார்பில் பாய்ந்து இரத்தம் குடித்தது இந்தியா வளர்த்த புலி. அத்தோடு இந்தியத் தமிழனுக்கும் தமிழீழத் தமிழனுக்கும் இருந்த பெருந் தொடர்பு அற்றுப்போயிற்று. தாயையும் சேயையும் பிணைக்கும் தொப்புள் கொடியை வெட்டி தாயும் சேயும் ஆனாலும், வாயும் வயிறும் வேறு என்று நிரூபணமாயிற்று.

துரோகம் செய்தது புலிகள் என்றும் இல்லை இந்தியா என்றும் இருவருக்கும் மனக்கசப்புச் சண்டைகள். ஊர் இரண்டுபட்டால், கூத்தாடிக்குக் கொண்டாட்டம் போல் சிங்கள அரசு துணிச்சலுடன் தனது படலத்தை இந்திய அரசின் உதவியுடன் தொடர்ந்தது.

பிராந்திய வல்லரசு அயல்நாடாக இருந்தும், கடற்படை கூட இல்லாத காலத்தில், அதை எதிர்த்து; ஒரேயொரு தரைமார்க்கமான சிங்கள அரசுடன் போரிடுவது என்பது மிகச் சுலபமல்ல. இவற்றிற்கும் மேலாக, உள்ளூரில் இருக்கும் மற்றய இயக்கங்களையும் எதிர்த்து, அவற்றின் ஆதரவாளர்களையும் மீறி, புலிகள் ஒரு பெரும் படையாக பரிணாம வளர்ச்சி கண்டிருப்பது வளர்த்த இந்தியாவிற்கே அதிர்ச்சி தான்.

புலிகள் ராஜீவ் காந்தியை கொல்வதற்கு மூல காரணமே இந்தியா தான்! நாங்கள் வளர்த்த புலிகள் எது சொன்னாலும் தலையை ஆட்டுவார்கள் என்று தப்புக் கணக்குப் போட்டு புலிகளின் ஒப்புதல் இல்லாமலேயே இந்திய-இலங்கை ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆயுத ஒப்படைப்பின் பின் போராளிகளுக்கு பொது மன்னிப்புத் தரப்படும் என்று சொன்ன இந்தியா புலி வீரர்கள் தற்கொலை செய்து கொள்ளக் காரணமாயிருந்தது. [இது பற்றிய எனது இடுகை: ராஜீவ் காந்தியின் கொலை தப்பா? ]

இன்றய காலத்தில், இஸ்ரேல் அரசாங்கத்தை எவ்வாறு ஃகெஸ்புல்லா என்னும் ஆயுத அமைப்பு எதிர்ப்பதால் லெபனான் மக்களால் மிகவும் ஆதரவூட்டப்படும் அமைப்பாக மாறியிருக்கிறதோ; அதே போல், அன்று இராணுவ-அரசியல் இலாபத்திற்காக கொள்கையை விட்டுக்கொடுக்காமல் இந்தியாவை எதிர்த்த காரணத்தால் புலிகளின் ஆதரவு பன்மடங்காகியது. புலிகள் இந்தியாவுடன் சினேகமாக இருக்கும்போதும் எதிரியாக இருக்கும் போதும் அவர்களின் வளர்ச்சியில் பங்கம் வராத முறையில் தக்கவைத்துக் கொண்டார்கள்.

இனப்பிரச்சனைக்கு முன் இலங்கை எவ்வாறு இருந்தது? சிங்கப்பூரின் தந்தை என்றழைக்கப்படும் லி குவான் யூ இலங்கையைப் பார்த்து ஆசைகொண்டு மலேசியாவிடமிருந்து பிரிந்து சிங்கப்பூரையும் இலங்கை போல் உருவாக்குவேன் என்னுமளவிற்கு இலங்கை இருந்திருக்கிறது.

இந்தியா புலிகளுக்கு மட்டுமா உதவியது? இல்லையே. இலங்கையின் சகல ஆயுதக்குழுக்களுக்கும் உதவியது. பல புலிக்குட்டிகளை வளர்த்து ஒரு பலம் இல்லா இராஜாங்கமாக்க எத்தணிக்க வே. பிரபாகரன் அவர்கள் ஒரு காட்டில் ஒரு புலி இருந்தால் தான் இலக்கை சரியாக அடையமுடியுமென்று முடிவெடுத்தார். இலங்கை மட்டுமின்றி பாகிஸ்தானிலும் கிளர்ச்சி வெடிக்க இந்தியா உதவியது. அயல்நாடுகளின் முன்னேற்றத்தை குலைத்தது; ஆனால் இந்தியாவிற்குள்ளேயே தனிநாடு கேட்ட சீக்கிய இயக்கத்தை படு வேகமாக கொன்றழித்தது. அமெரிக்கா ரஷ்யாவிற்கு எதிராக அதன் அயல் நாடுகளிலும் ரஷ்யாவிற்கு உள்ளேயும் பிரிவினைவாதிகளை உருவாக்கிக்கொண்டிருந்த காலத்தில் இந்தியா தனது வட்டாரத்தில் அதைக் கையாண்டது. இந்தியாவிற்கும் அதைப் போல் வெற்றி தான் இன்று கிடைத்துள்ளது: இந்தியா ஒரு பிராந்திய வல்லரசு.

பாகம் – 02 >>

_____
CAPital

5 Comments

Duraivelan உடைய கருத்துக்கு மறுமொழியிடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image

© 2023 - All Right Reserved. | Adadaa logo